Sunday, 7 April 2013

அம்புலியே ஓடி வா! (கிராமிய நடை)

பகல் முச்சூடும்
ஒழச்சிட்டேன்!
பாடா படுத்துது
பெரும் பசி!
ஒளிஞ்சிகிட்ட
அம்புலியே
சீக்கிரமா ஓடி வா!

சேத்து வச்ச
சில்லரைய
முழுசா எண்ணி
பாத்து புட்டேன்!
சீமை எண்ணெய்
வாங்க கூட,
பத்தலியே
இந்த காசு பணம்!

மரத்தடி நெழல்ல
மங்கலான இருட்டு,
மயக்கமா தூக்கமான்னு
தடுமாறி தவிக்கிறனே!
ஓடி வா அம்புலியே
ஓன் முகத்த காட்டு!

ஆக்கி வச்ச பானயில
பழஞ் சோத்த வேடு கட்டி
வச்சிருக்கன்!
அவசரமா அள்ளித்திங்க
உனக்காக காத்திருக்கன்!
ஓடி வா அம்புலியே!

சித்தெரும்போ,
சிறு கல்லோ, மண்ணோ,
தூசியோ நானும்
உத்து பாத்து திங்க
வேணாம்!

அம்புலியே!
ஓன் வெளிச்சத்துல
எம்மாஞ்சோறு
இருக்குதுன்னு
பானய்க்குள்ள
பாத்துபுட்டா,
குடிச்சிபுட்டு சாப்பிட வரும்
என் ஆச மச்சானுக்கு,
சோத்த அள்ளி வச்சிபுட்டு
மிச்ச சோறும் தண்ணியும்
சாப்புட நான் வேண்டாமா?

அம்புலியே!
சீக்கிரமா ஓடிவந்து
என் பசி தாகம்
அடக்குவியா?


No comments:

Post a Comment