Wednesday, 27 November 2013

தவளைக்கு மட்டும்!

பாம்புக்கு
தலையையும்,
மீனுக்கு வாலையும்,
காட்டும்
விலாங்கு மீன்கள்
பெருமை கொள்ள
தேவையில்லை!


இரட்டை வாழ்க்கை
என்பது நிரந்தரமல்ல!
மீனிடமும்
பாம்பிடமும்
தப்பிக்கும்
விலாங்கை அழிக்க,
காத்திருக்கும்
மற்றுமொறு விலங்கு!

மனிதனே!
இரட்டை வாழ்க்கை
உனக்கு
தேவையில்லை
விட்டுவிடு!
அது தவளைக்கு
மட்டும் போதும்!

Tuesday, 26 November 2013

மரணம்!

செடிகளின்
மரணம்
வருங்கால
சந்ததிகளுக்கு
உரமாய்!

உயிர்விடும்
தாவரங்கள்
மனிதனுக்கு
உணவாய்!

சிப்பியின்
மரணம்
முத்துக்களின்
தோன்றல்களாய்!

முகிலின்
மரணம்
மழையின்
வருகையாய்!


இரவின்
மரணம்
பளிச்சிடும்
பகலாய்!

விலங்குகளின்
மரணம்கூட
சக விலங்குகளுக்கு
உணவாய்!

மனிதா!
உன் மரணம்
யாருக்கு
உதவியாய்?
கேள்விக்கு பதில்...
சுழியாய்!

Saturday, 23 November 2013

நான்...ஏன்?

அவள்...
என் உரு தெரியா
உருவத்தில்,
உறவாடியபோது
இன்பம் என்னை
வீழ்த்தியது!

உற்றுப் பார்த்த
அவளின்
கண்களுக்குள்ளே,
எனது உருவம்
சிரித்தபோது
எல்லையில்லா
உவகை கொண்டேன்!

உலகை மறந்து
அவளை நான்
தஞ்சமடைந்த போது
என்னை மறந்தேன்!

தேன் சுவை சொட்டும்
அவளின் இதழ் பருகி
கடித்தெடுத்த
இரத்தத்தை
என் நாவால்
வருடியபோது
ஏக்கம் மறந்தேன்!


அவளின்
பிஞ்சுக்கரங்கள்
என் நெஞ்சத்து
மயிர் நீவி
உழற்றியபோது
உடல் சிலிர்த்தேன்!

கை கால்கள்
கோர்த்து
உடலும் உயிரும்
ஒன்றாய் தழுவி
என்னை உரசியபோது
காலம் மறந்தேன்!

அவளின்
எல்லையில்லா
இனிய சொற்கள்
என்னை
கொள்ளை கொண்டபோது,
நாளுக்கு நாளாய்
பரிதவித்தேன்!

அவள்...
என் உள்ளத்தை
உரசிய
அவச்சொற்களை மட்டும், 
நான்...ஏன்?

Tuesday, 19 November 2013

இனியாவது...

வெட்டிய நகம்
வளரத் துடிக்கும்!
விலகிய நீர்
சேரத் துடிக்கும்!
விண்ணை விட்டு
மழையாய் வந்த
மேகம்...
மீண்டும் ஆவியாய்
மேகமாய்!

பட்டமரம்
தழைப்பதும்,
பாலை நிலத்தில்
பூ பூப்பதும்
இயலாத ஒன்று!


காய்ந்த சேறு
சூடு கண்டால்,
செங்கல்லாய் மாறும்!

ஒட்டியும்,உழன்றும்,
ஒன்றற கலந்தும்,
சிலராய், தனியாய்
கணக்காய்...
ஒதுங்கிவிடும்
உறவுகளை,
என் இதயத்தில்
சுரம் மீட்ட நினைத்த
எனக்கு வெட்கம்!

இனியாவது
இணையுமா?
பிரிந்த உறவு?

Monday, 18 November 2013

அவமானங்கள்!

சுகத்திற்குண்டான
அன்பின் சீற்றத்தை,
உணர்ச்சியின்
பரிதவிப்பை,
சிறு பிள்ளையின்
பிதற்றலை,
கீழ்த்தரமாய்...
வாழ்க்கை எனும்
வைபோகத்தில் உரசி,
விலை வைத்து
வீண் பதற்றமாய்,
இலகுவாய்...
உயிரின் பிணைப்பை,
காற்றிலிடைப்பட்ட
தூசியாய் அலைக்கழித்து,
எனது பற்றற்ற
மனதுக்குள்,
அன்பெனும் அலையை
எங்ஙனம் பாய்ச்சுவேன்!


நான் என்றென்றும்
உயிராய் வாழ,
இனியுமா?
பத்திரம் தீட்டுவேன்!

வாழ்க்கை என்பது
என்றாவது ஒரு நாள்...
வரையரைக்கு
வந்தே தீரும்!
ஆயினும்...
எல்லை மீறி
வந்து போகும்
தாகங்கள்...?
அறுவறுப்பான
அவமானங்கள்!

Wednesday, 13 November 2013

எழுப்புவாயா?

நீண்ட
இடைவெளிக்கு பின்...
முகவரி தேடுகிறேன்!
உறக்கத்தை
உறங்க வைத்துவிட்டு,
நான்...
கண் விழித்திருக்கிறேன்!

எண்ணற்ற பெண்களின்
கண்ணீரில் நான்...
குதூகலம் பெற்றேன்!

ஒன்றிரண்டு
பெண்களை
கோபக்கனலில்
இழந்தும் விட்டேன்!


அடுக்கடுக்காய்
காதல் அம்புகள்
மலை போல்
குவிந்தாலும்,
அதனை துகளாக்கி
காற்றில்...
பறக்கவிட்டேன்!

திமிர் கொண்ட
இரத்தம் இன்னமும்
என்னோடு!
உன் ஏக்கப் பார்வையில்
கண்ணீரை கண்டேன்!

இதோ...
ஓய்ந்துவிட்டேன்!
இனி எனக்குள்
துடிப்பை நீதான்...
நிலாச்சோறாய்
ஊட்ட வேண்டும்!

சிங்கம்...
வண்ணக்கனவுகளுடன்
உலா வர போகிறது,
தட்டி எழுப்புவாயா
மீண்டும் காதலை!

Sunday, 10 November 2013

கதிரவனாய்...

உதிரம் கொதிக்கிறது,
உயிர் சிரிக்கிறது,
உறவு ஓலமிடுகிறது,
பிரிவு தவிக்கிறது!

காவல் உறங்குகிறது,
உணர்வு சல்லாபிக்கிறது,
பசுமை ஒளிர்கிறது,
கருமை அழைக்கிறது!


அவள் ஏங்குகிறாள்,
அவன் இறங்குகிறான்,
அன்பு பாய்கிறது,
அரவணைப்பு தேய்கிறது!

மூடிய முகிலுக்குள்
முகம் நுழைத்த
கதிரவனாய்...
நான்!

இயற்கை சிரிக்கிறது!

மகரந்தம் உண்ண,
மலரையே...
சாட்சி வைத்தேன்!

தெளி தேன்
பக்கத்தில்,
தேனியின்
புலம்பல்
கண்டேன்!


ஓடுகிற
ஓட்டத்தில்,
காற்றடித்து
ஓய்ந்த நேரம்!

ஊண் உறங்கியது,
உயிர் தவிக்கிறது,
இயற்கை சிரிக்கிறது!

Friday, 8 November 2013

மூடு பனி...

சிறு மணல்
வீடு கட்டி,
அலை வந்து
அடித்து போகும்
நிலையில்
ஏங்கி நிற்கும்
மகிழ்ச்சி!


முத்தெடுக்க
கடலில் மூழ்கி,
சிப்பி கிடைத்தாலும்
முத்து இருக்குமா?
என்ற தவிப்பு!


காகிதத்தில்
செய்த கப்பல்
என்று தெரிந்தும்,
கரை சேருமா?
என்ற எதிர்பார்ப்பு!


வண்ணமிகு
வானவில்
வானத்தில்
நிரந்தரமாய்
நிலைக்குமா?
என்ற பரிதவிப்பு!

இவையாவும்
கோடையில்
தோன்றும்
மூடுபனிகள்!



Thursday, 7 November 2013

கருப்பு வெள்ளை!

மனித நேயத்தின்
உன்னத மாற்றங்கள்!
கனவுகள் கூட
கருப்பு வெள்ளை!


எண்ணச்சிதறலில்
வண்ணச் சிறகுகள்!
வரவுகள் இல்லா
வாழ்க்கை செலவுகள்!
பறக்க முயன்றும்
படுதோல்விகள்!


தளிர்விடும் காலம்
இயற்கையின்
கோணல்...
உலகம் தெரியாமல்
வாழ்ந்த நான்,
முதல் முதலாய்
இவ்வுலகத்தை
உற்று நோக்குகிறேன்!


என் கண்களுக்கு
இனியாவது
புத்தொளி
தெரியட்டும்!

Wednesday, 6 November 2013

தூரத்து பச்சை!

கண் சிமிட்டி
மின் மினுக்கும்
நட்சத்திரங்களின்
அழகை...
நிலவிடம்
வினவினேன்!
அது எள்ளி
நகைத்தது!

ஆடும் மயிலின்
அழகை...
வான் கோழியிடம்
மெச்சினேன்!
அது அலுத்து
கொண்டது!


பசுமையின்
இனிமையை...
மலையிடம்
கூறினேன்!
மலை சிரித்து
கொண்டது!


மலருக்கும்
வண்டுக்கும் உள்ள
உறவை...
தேனியிடம்
புகழ்ந்தேன்!
தேனி அலட்சியம்
செய்தது!

அருகருகே
பச்சையும்
கசக்கும்!

Friday, 1 November 2013

இருண்டபின் ஒளி!

அவன்
சுவைத்து
முடித்து,
வீசி எறிந்த
மா... விதை
மீண்டும்
தளிராய்!


செத்து மடிந்த
மானின் தோல்,
அழகிய... தோல்
பொருள்களாய்!


சிதைந்து
புதைந்த காடுகள்,
நிலக்கரிகளாய்!


சிப்பியின்
வயிற்றில் சிக்கிய
சிறு மணல்கூட
முத்துக்களாய்!













காதல்...
இருண்ட பின்னும்
ஒளிரும்!