Wednesday, 30 January 2013

நீ! பெண்தானே!

அடி பெண்ணே!
பட்டாய் நினைத்தேன்,
பஞ்சனைக்கு வரவில்லை!

பூவாய் நினைத்தேன்,
சரம் தொடுக்க முடியவில்லை!

கண்ணாய் நினைத்தேன்,
கடைசிவரை உன்னை
பார்க்க முடியவில்லை!

விட்டில் பூச்சாய்
நினைத்தேன்,
என்வாழ்வில் கடைசிவரை
ஒளீயில்லை!

செருப்பாயும் நினைத்தேன்,
நீ காலுக்கு துணை
வருவாயென்று!

செம்பவழமாயும் நினைத்தேன்,
நீ தோளுக்கு துணை
வருவாயென்று!

ஏனோ  நீயும்
காதல் கட்டுக்குள்,
கடைசிவரை வரவில்லை!

ஓ! மறந்தேன்,
நீ! பெண்தானே!

நிறைகுடம்!

என் இதயத்தின்
அளவேயிருக்கும்,
சின்னஞ்சிறு
தேன்சிட்டே!

உன் சிறிய இதயத்தில்,
பரந்த எண்ணத்தை,
பெற்றுவிட்டாய் நீ!
அதனால்தனோ, 
ஆசைநாயகியுடன்,
ஆழ்ந்து குலவுகிறாய்!

என் பலுவான இதயம்
கருவுற்று காத்திருக்கிறது!
நிறைகுடம் ததும்பாது,
எனினும் உனக்காக
நிறைமாத என் இதயம்,
பிரசவிக்கும் நிச்சயமாய்
என் காதலியை!

தேன்சிட்டே!
அதன்பின்னே
நான் தருவேன் சிறு இடம்,
இதமாய் பறந்து வந்து
இனிமை பரப்பிவிடு!
என் இதயத்தில்!

Tuesday, 29 January 2013

நீதான் என் காதலி!

நீ சேற்றில் முளைத்தாய்,
செந்தாமரை! என்றேன்.
குப்பையில் கிடந்தாய்,
குன்றுமணி! என்றேன்.


கடைக்கண் காட்டினாய்,
காதலி! என்றேன்.
செவ்வுதடு விரித்தாய்,
ஆருயிரே!என்றேன்.

சிரித்தாய் நீயும்,
சிந்தனைச்செல்வி
என்றேன்!
வாய் விரித்தாய்,
வானுலகே! என்றேன்.

உன் திறந்த வாயால்,
செருப்பென்றாய்!
சிந்தை மயங்கி,
செத்தேவிட்டேன்!

ஒ! என்னிடம் உனக்கு,
காதல் இல்லை போலும்!
ஆனாலும் நான் உன்னை
காதலிக்கிறேன், கண்ணே!
என் உயிருடன் உயிராய்,
நீதான்! என் காதலி!

Monday, 28 January 2013

காய்க்கும் மரங்கள்!

அடி பெண்ணே!
மயிலே, குயிலே
என்று பழங்கவிதை
பாடினேன்!

கண்ணே, கனியமுதே
என்று காதல்மொழி
பேசினேன்!

ஆனால் நீயோ,
காதல்மணம் வீசி
கொஞ்சி விளையாடி,
கடைசியில்
கடைமடையில்
தள்ளிவிட்டாய்
என்னை!

காய்க்கும் மரத்தில்
கல்லடி நிச்சயம்!
ஆம்! ஆண்கள்...
பெண்கள்
காதல்செய்து
ஏமாற்ற,
காய்த்து குலுங்கும்
மரங்கள்!

சரித்திரங்கள் சல்லடை கண்கள்!

மயிலே!
உன்னைப் பற்றி,
நான் கூறிய
வெவ்வேறு
வார்த்தைகள்,
இதயத்தை
சல்லடை
கண்களாக்கிவிட்டு
வந்தவை!

இதயத்தில் இரத்தம்
சீா்பட துடிக்கிறது,
ஆயினும்
பார்வையில் பணிவில்லை
நோக்கில் துணிவில்லை!
உன் செயல்
எனக்கு புதி(ர)தன்றோ?

செவ்விதழ் விரித்த
செம்மை செல்வி
உன் செங்காந்தல்
விழியினிலே,
செழுமையில்லை
செவ்வியளே!

கார்குழல்
முன்வைத்து,
களியுடல் காட்டி
கண்ணை கண்ணால்
கண்பட வைத்து,
கடைசியில்
உரசி வீசுகின்றாய்
வெப்பம்!

களவில் ஒழுகி
கண்டபடியாகிவிட்டேன்
கண்ணே
உன்னையெண்ணி!

மிதவெப்பக் காற்று
உன் வாயில்
இனிமை சொற்களை
தாங்குமாயின்,
அதுவே நமக்கு
மூன்றெழுத்தின்
ஆரம்பம்!

புகழ் சொற்கள்
ஏராளம் நின்னைப்பற்றி
மணந்தபின் சொல்ல
பதிவில்லை என்னிடம்!

உன் கவிமொழியின்
சொற்கள் தாங்க
காத்திருக்கிறது
என் இதயம்!
கண்டபடி கூறி
வெம்புண்ணில்
வேல்கொண்டு
பாய்ச்சுவாயென்று
எண்ணவில்லை நான்!

நிச்சயமாய்
என் இதயத்துளைகள்
உன் மூன்றெழுத்து
வார்த்தையை
உட்செல்ல
வழிவிடும் நலமாய்!




இருகிய இதயம்!

அன்பே!
உதிரும் மணலாம்
உன் சிறு இதயத்தில்,
காதலென்னும்
சல்லிவேரை,
பரவவிட்டேன்!

உன் இதயம்தான்
இருகிவிட்டதறிந்து,
என்னை நானே
விடுவிக்க
முயன்றேன்!
முடியவில்லை!

ஆம்! உன் இருகிய
இதயத்திலிருந்து,
விடுபட்டது,
என் காதலென்னும்
சல்லிவோ்தான்!

மல்லிகையே! நீ பாவம்!

மனம் பரப்பும்
மல்லிகையே!
மாரி பொழிய
பூத்தாலும்,
மாறி மாறி
தலையமரும்
மல்லிகையே!

பெண்குணம்தான்
மாறுமென்றால்,
நீயுமா பெண்ணடிமை?

பெண்பித்தன்
நானிருக்க,
உனக்கேன்
அவப்பெயர்?

செடியொன்றில்
பூத்தாலும்,
ஒருத்தியிடம்
இல்லாத
மல்லிகையே!
நீ! பாவம்
பெண்ணினத்தால்!

பெண்ணே உன் இனம் மோசம்!

உன்னை
நான் நோக்கினேன்,
கண் சிமிட்டினாய்
என்னை பார்த்து!

கூப்பிட்டு
பேசினேன்,
குழைந்தாய்
என்னிடம்!

வாவென்று
சொன்னேன்,
வந்தாய்
என்னுடன்!

ஏதேனும் பேசு
என்றேன்,
பேசினாய்
காதல்மொழி!

ஏதேனும்
கொடு என்றேன்,
கொடுத்துவிட்டாய்
கன்னத்தில்
அ(றை)தை!

பெண்ணே!
உன் இனம்
மோசமானது!

அருவிக்கு...!

அருவியே!
உன் சலசலப்பில்,
நிம்மதி இல்லை!
உன் நீர்த்தெளிப்பில்,
கனவுமில்லை!

உன் உடல்குளிர்ச்சியே,
நானறிந்த உண்மை!
வெளிவேடம்
வீண்பகட்டு!
நானறிவேன்
நன்றாய்!

என் கறைபடிந்த
இதயத்தில்,
கடைசிவரை
நீராய் நீயோடி,
கனநேரம்
கழுவிவிட்டால்,
பாழும் மனது
பரிசுத்தமாகிவிடும்!

என் ஆசை
அனைத்தும்,
அடித்துகொண்டு
போய்விடும்!

நீ மறவாய்!

ஓரேழு நாளில்,
உழலவைத்தாய்!
உன் பொன்னுடல்
காணாமல்-கண்ணே!
கற்பனை பல வளர்த்து,
கலங்கிவிட்டேன்!
கண்ணில் நீரோ
கானல் நீராகிவிட்டது!

நெஞ்சக்கதவின்
தாழ்பாலவிழ்த்து,
கொஞ்ச சொல்லி
உனையழைத்து,
கஞ்சக்காரணமாய்
பார்வையிலே
சஞ்சலம் பலவளர்த்து,
சலித்துவிட்டேன்!

நீ செப்புமொழி
நான் கேட்க,
உயர் சிந்தைதனில்
படியமைத்து,
சிறிதுசிறிதாய்
ஏறி வந்தால்,
உன் சின்னக்கரம்
அசைத்தோடினாயே!

கன்னக்கதுப்பில்
முகம் புதைத்து,
எண்ணச் சிறகினை
விரித்துவிட்டு,
சில்லென்று பறந்து
வந்தேன் நானும்,
சிற்றுடல் நோக
சிறகொடிந்தேன்!

உனை பிரிய
உரமில்லை என்னில்!
உள் மனதில்
பதிந்துவிட்டாய் நீ!
செக்கச்சிவந்த
செவ்வுதடுக்கு,
தக்க நேரத்தில்
உணவளிப்பேன் நான்!
நீ! மறவாய்!

வாசமில்லா மலர்!

மல்லிகையே!
உன் நிறத்தைவைத்து
மசியவில்லை என்மனம்!

உன் அருமழகை கண்டு,
கனியவில்லை நான்!

வாசமில்லா மலராயினும்,
அதனுள் தேனைப்பற்றி
சிந்திப்பவன் நான்!

மையல் கொள்ளவில்லை,
மயங்கவில்லை உன்னிடம்!

மாறாய், என் மனதை
கொடுத்துவிட்டேன்
உன் தேன் மணத்தில்!

Sunday, 27 January 2013

செண்பகமே!

செண்பகமே!
சிறகடித்து பறக்கும்
உன்னை,
சிற்பமாய்
செதுக்கிவிட்டேன்,
உள் மனதில்!

உன் சிறகசைவில்,
தனித்தனியாய்,
இன்பவலி
பெற்றுவிட்டது,
என் மனம்!

பறந்து செல்ல
முயன்றாயானால்,
என் இதயச்சிறை
உடைந்துவிடும்,
உள்ளக்கதவு
தகர்ந்துவிடும்!

சிற்ப செண்பகமே!
உயிர் பெற்று
தங்கிவிடு,
காதலுடன்
என் இதயத்தில்!

Friday, 25 January 2013

மனம்!

மனமே!
உன் குரங்குதனத்தில்,
பற்றுக்கிளையாய்
இருக்க மாட்டேன்,
ஒருபோதும்!

மலர்ச்சியுற்ற
உன்போக்கில்,
மெளனம் சாதிப்பேன்!

கனவிலும் கூட
உன் தாவலுக்கு,
இடமளியேன்!

மனமே!
நீ சிற்பமாய்
இருப்பினும்,
உயிரளிப்பது
என் கையில்!

உண்மைக் காதல்!!

செங்கமல தேன்வண்டே!
நீ சுற்றி சுற்றி வந்தாலும்,
உள்ளே தேனை வைத்து
அசையாமலிருக்கும்,
அம்மலரை!

அலையும் உனைக்கண்டு,
ஆதங்கத்தால் இதழ்மூடி,
அன்புக்கதவை காதற்தேனை,
அடைத்து வைத்து காத்திருக்கும்,
அம்மலரை!

உன் அற்ப கண்களுக்கு
தனித்து தடுமாறும் மலராய்,
தடம் மாறி தெரிந்தாலும்,
உண்மையில் இயலாத
காரணத்தை எண்ணி,
நொந்துவிடும்
அம்மலரை!

கனவிலும் உன்பொருட்டு
காதலில்லையென்று,
எண்ணிவிடாதே!
அந்த தேன்மலர்,
காத்திருந்து இதழ்விரித்தலே,
உண்மைக்காதல்!

மரபு தாலாட்டு!

உலகெல்லாம் உலை வைத்து,
உணவு சூட்டினிலே சல்லாபித்து,
சிங்கார தென்றல் சீர்பரவ,
சிற்றின்பம் காணும்பொழுதுறங்கு!

மகரந்தம் பல உண்டு களித்து,
மயக்கத்துடன் ரீங்காரமிட்டு,
துணையுடன் இசைபாடும்
தேனி கலவும்பொழுதுறங்கு!

சந்திரனிடம் சல்லாபித்து,
இதழ் விரிக்கும் மலராம்-அல்லி,
தன் மயங்கிய பார்வையிலே,
காதலனை நோக்கையிலுறங்கு!

பகலெல்லாம் பக்கத்துணையுடன்,
பல இடமலைந்து திரிந்து-பவழ
பச்சிளங்கிளி தன் கூட்டில்,
பசித்து இருக்குங்காலுறங்கு!

பகல் கழித்து போவோரை எல்லாம்,
இரவினிலே இனிமையாய் கண்டு,
அகன்ற பார்வையிலே தன்னினம்,
தேடும் ஆந்தையுடனுறங்கு-நீயும்!

காதலுக்கு சாதியுண்டு!!

காதலுக்கு சாதியில்லை-என்ற
கனிவான சொல்லை
காலம் காலமாய்,
கவிஞன் சொன்னான்!

கன்னிப்பெண்ணே-நானும்
கடைசிவரை கனவுடன்,
கவிஞன் சொல்லில்
கலங்கிவிட்டேன்!

காவிய சொல்லை,
கடைமடையில் தள்ளிவிட்டு,
காதலுக்கு ஆண்சாதி,
கள்ளமான பெண்சாதி
காலத்தில் உண்டென்று,
கண்ணிமையில் காட்டிவிட்டாய்,
உன் கள்ளமான பெண்மனதை!

கண்ணே!
காதலுக்கும் சாதியுண்டு!
காலத்தின் புதுமொழி!

இளந்தமிழ் நங்காய்!

இளநங்காய் இறுமாந்து கேட்கிறேன்,
இளந்தமிழ் காதலனாய் உன்னை!
இளவல்கவர் கண்களோ இரட்டைகாப்பியம்!
இசை கழுத்தாரமோ கீழ்கணக்கு!
இடுப்பின் ஒட்டியாணமாய் பத்துப்பாட்டு!
இளமை காற்சிலம்பாய் எட்டுத்தொகை!
இனிகுரலாய் தமிழில் எழுச்சியும்- உன்
இழுமூச்சாய் இயல் இசை நாடகமும்!

வண்டு ஏமாந்து மொய்க்கும்-உன்
வழவழப்பு செவ்வுதடுகளில் தமிழ் பாடல்!
வண்ணக்கால்களை அசைத்தால் -உன்
வடிவழகுக்கு ஒப்பா பரதக்கலை!
வளமிகு உடலைக்கண்டு காதலானேன்,
வளைகரம் பற்றினேன் தமிழால் உன்னை!
வஞ்சி நீ! தமிழகத்தில் மிளிருங்கால்,
வடமூதாட்டி வலைவிரிப்பதா உனக்கு?

கலைமிகு கவியாக்கிய கவிஞர்கள்-உன்
கவியுடை கண்ணால் கவரப்பட்டார்கள்!
கன்னித்தமிழ் காரிகைக்கு காலமெல்லாம்
கவிகாதலர்கள் கடும்பணி செய்வாரே!
காலத்தால் அழியாத உன் இளமை,
கள்ளி அந்த வடமொழியால் அழியுமோ?
கண்ணே தமிழ்பெண்ணே என்றென்றும்,
காலடியில் பணிசெய்வார் தமிழ் காதலர்!

Thursday, 24 January 2013

மயக்கம்!

நெஞ்சுக்குள்ளே
தஞ்சம் வளர்த்த,
கனையாழி நங்கை!
கன்னத்திலே
கற்கண்டு முத்தமிட்டு,
கவின்மிகு கண்களாலே
கவிதை பல பாடி,
செந்தேனை சிந்தும்
செவ்வரளி பூச்சூடி,
என்மண பந்தலிலே
ஊஞ்சலாட மறுத்துவிட்டு,
மன்னித்துவிடு என்றாள்!
மன்னித்தேன் நானும்,
மயக்கத்துடன்!

தமிழா இன உணர்வு கொள்!!

சேர, சோழ, பாண்டியர் கூடி ஒருமித்து,
பேணி வளர்த்த தமிழ்- நம் தமிழ்!
பிற்சோழர், களப்பிறர், நாயக்கர்,
கிழக்கிந்தியர் கூடிபிறந்த தமிழினம்-நாம்!
அத்துனைபேரும் வாழ்ந்து மறைந்த
தமிழகம் நம்நாடு எனக்கொள்வீர்!
குணத்தால், இனத்தால், பாகுபாடின்றி
ஓங்கி வளர்ந்த தமிழோ -நம்மொழி!

பின், சாதிசண்டை, ஊர்வழக்கு
ஏன் நமக்கு எனக் கொள்வீர்!
சரித்திரம் வேண்டாம் சாதியுங்கள்
என்நாளும் நாம் தமிழர் என்று!
தன்மானத்துடன் வாதிடுங்கள்
நாமனைவரும் தமிழடிமை என்று!
கவிமிகு தமிழ்மொழியொழிய-எம்
மொழியும் ஏற்கமாட்டோம் என்றுரைப்பீர்!

என்சாண் உடலுக்குள் ஊட்டிய சோறு,
தாய்ச்சோறு- அது தமிழ்சோறு என்க!
உடலசைவு ஒவ்வொன்றும் தமிழ்,
உள்ளம் உள்ளவரை தமிழ் என்க!
வரும் புதியதோர் தலைமுறைக்கும்,
தமிழ்மொழியில் சொல்லுண்டு என்க!
வெவ்வேறு இனம் கொண்ட தமிழ்நாடு,
தமிழனை மட்டுமுடையது-இனம்கொள்க!

Wednesday, 23 January 2013

தமிழன்னை!

தஞ்சமென வந்தவர்க்கு இடமளித்து,
தகுந்த மொழி தந்திட்ட இளமாதே!
இல்லை என்று சொல்லாமல்-சொல்
வழங்கும் கண்கவர் கற்பகமே-உன்
மக்கள்தனை மடிதனில் சீராட்டி-தமிழ்
எனும்பாலுட்டி இசையெனும் இனிப்புடன்
இன்பசுகம் அளித்திட்ட தமிழ்மாதே-உன்
காலடியில் வீழ்ந்திருக்கும் தமிழ்மகன் நான்!

களஞ்சியமே! களங்கமிலா உன்மடிதனில்
தவழவேண்டிய தமிழ்மக்கள்- கடல்
தாண்டி சீர்கெட்டு பேர்கெட்டு- உன்
கண்கள் முன்னே கசக்கபடுகின்றனரே!
மூன்றாம்கண் வேண்டுமோ முத்தமிழே,
சுட்டெரிக்க முடியாதோ உன் மக்களால்?
அன்னையே! வீரப்பால் ஊட்டினாயோ
அல்லது மரத்துபால் ஊட்டினாயோ-தமிழனுக்கு!

நான் எழுதிய இக்கவிதை மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி 88-89 ஆம் ஆண்டு
மலரில் வெளியான கவிதையாகும்

என்னே உன் விந்தை!

தூரத்து பச்சையாய்
எட்டாமிலிருந்த
வானத்து விண்மீன்களும்,
வட்டமிடும் நிலவும்,
நாம் சென்றுவரும்
சுற்றுலா தலங்களாய்!

பூமிக்கு துணையாய் நின்ற
கோள்களெல்லாம்,
மனிதன் இளைப்பாறும்
இனிய பூங்காக்களாய்!

அதோ! அந்த இனியவானில்,
தனித்து வாழ்ந்து வந்த
விண்கோள்களுக்கு
துணையாய்
செயற்கை கோள்கள்!

உலகை சுருக்கி வலைத்து
பின்னப்பட்ட
வலைபின்னல்கள்!
நொடிபொழுதில்
கனிணி தொடர்புகள்,
விருந்துக்கு தொலைகாட்சி!

இனிமை பல தந்துவிட்டு,
இயற்கை மாறாமல்
இனிமையாய்
காட்சிதரும்
இனிய வானே!

எனக்குள் எழுந்த
கேள்விக்கெல்லாம்
உன் விந்தைகள் மட்டுமே
பதிலாய்!